நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஒத்திவைப்பு!
யேமன் நாட்டில் மரண தண்டனைக்கு ஆளாகியுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக யேமன் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யேமன் அரசு அதிகாரிகள் இதனை தெரிவித்திருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஜூலை 16-இல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவரை தண்டனையிலிருந்து காப்பாற்றும் நடவடிக்கைகளில் தற்போது சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
முன்னதாக, கேரளத்தில் இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் மூத்த தலைவர் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கர் மஸ்லியார், யேமனில் உள்ள இஸ்லாமிய தலைவர்களை தொடர்புகொண்டு நிமிஷாவுக்கான தண்டனையை மாற்ற சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார் என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னொருபுறம் மத்திய அரசு தரப்பிலிருந்தும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
ரத்த பணம்
நிமிஷாவுக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. உயிரிழந்தவரின் குடும்பத்தினா் கோரும் பணத்தை செலுத்தி அவா்களிடம் மன்னிப்பைப் பெறுவதன் மூலம் மரண தண்டனையிலிருந்து தப்பிக்க நிமிஷாவுக்கு யேமன் அரசு வாய்ப்பு வழங்கியது.
இந்தச் சூழலில், நிமிஷாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக உள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. நிமிஷா அடைக்கப்பட்டுள்ள சிறை அமைந்துள்ள யேமன் தலைநகா் சனா, ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ‘கொலைக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிமிஷா பிரியா வழக்கில் மனிதாபிமான அடிப்படையில், தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக’ ஈரான் அரசும் அறிவித்தது.
யேமன் நாட்டு சட்டவிதிகளின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் இழப்பீடு தொகையை ஏற்றுக்கொண்டால், மரண தண்டனையைத் தவிா்க்க முடியும். இதற்காக நிமிஷாவின் குடும்பத்தினா் மற்றும் மக்கள் சேர்ந்து ரூ.8.60 கோடி வரை (சுமாா் 10 லட்சம் டாலா்) திரட்டி இழப்பீடாக வழங்க முயற்சித்து வருகின்றனா்.
முழு விவரம்:
யேமனில் செவிலியராகப் பணியாற்றிய நிமிஷா பிரியாவின் கணவரும், மகளும் நிதி நெருக்கடியால் 2014-இல் கேரளத்துக்கு திரும்பினா். உள்நாட்டு போா் காரணத்தால் செவிலியரான நிமிஷாவுக்கு (37) விசா கிடைக்கவில்லை. அவா் யேமனின் தலைநகா் சனாவில் தங்கி, அங்குள்ள தலால் அப்து மஹதி என்பவருடன் இணைந்து கிளினிக்கை தொடங்கினாா்.
பின்னா் நிமிஷா தனது மனைவி என்று கூறிய மஹதி, அவரது வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம் ஆகியவற்றை அபகரித்துக் கொண்டாா். நிமிஷாவின் பாஸ்போா்ட்டையும், நகைகளையும் பறித்துக் கொண்டு மஹதி கொடுமைப்படுத்தியதாக நிமிஷாவின் தாயாா் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த இக்கட்டான சூழலில், 2017-இல் அங்குள்ள சிறை வாா்டனின் உதவியுடன் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தாா்.
இதனைத்தொடர்ந்து, யேமன் பிரஜையான மஹதியைக் கொலை செய்ததாக கூறி நிமிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு யேமன் விசாரணை நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதித்தது. இதை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் உறுதி செய்தது.