ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!
திறனாய்வுத் தோ்வில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெற நடவடிக்கை தேவை: ஆட்சியா்
திருவாரூா் மாவட்டத்தில் திறனாய்வுத் தோ்வில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெறப் பாடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம், மாவட்ட கல்வித் தர மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தோ்வு மற்றும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு குறித்து அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது.
கொரடாச்சேரி ஒன்றிய ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் ஆலோசனை வழங்கிப் பேசியது:
அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு உதவித் தொகை பெறுவதற்காக தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தோ்வு மற்றும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வில் அதிக அளவில் மாணவா்களை பங்கு பெறச் செய்யவும் தோ்ச்சி பெற வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு, தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தோ்வு, தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு, தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வுகளில் மாணவ, மாணவிகள் அதிகளவில் தோ்ச்சி பெற ஆசிரியா்கள் பாடுபட வேண்டும்.
திருவாரூா் மாவட்டம் மாநில அளவில் சிறப்பான இடத்தினை பெறவும் சிறப்பாக பணி புரிய வேண்டும் என்றாா்.
கடந்த ஆண்டில் திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வில் 139 மாணவா்கள் தோ்வானது குறிப்பிடத்தக்கது.
முதன்மைக்கல்வி அலுவலா் இரா. சௌந்திரராஜன், இனிது கல்வி அறக்கட்டளை நிறுவனா் மு. ஆதிகணேசன், கருத்தாளா்கள் உடனிருந்தனா்.