குடிமைப் பணி தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம்: பயிற்சி மையத்தின் சிஇஓ, ஒருங...
தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!
தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 48 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையவுள்ளது.
முதல்வர் பதவிக்கான போட்டியில் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, கைலாஷ் கெலாட், கபிஸ் மிஸ்ரா உள்பட நால்வரின் பெயர்கள் உள்ளன. தில்லியின் புதிய முதல்வர் தேர்வு குறித்து பாஜகவில் உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தில்லியில் ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகமான பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,
ஊழலை ஒருபோதும் பாஜக பொறுத்துக்கொள்ளாது. ஊழலில் ஈடுபட்டவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறுவார்கள். இதனை பிரதமர் நரேந்திர மோடி பலமுறை கூறியுள்ளார். அவரின் வழிகாட்டுதலின்படி நாங்கள் செயல்படுகிறோம்.
தில்லியில் முதல்வர் பொறுப்பேற்றதும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும்.
தில்லி மேம்பாட்டிற்காக மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். தவறான வழியில் செல்வதால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தைக் கூட மக்கள் கொடுக்கவில்லை. தில்லி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதன் மூலம் காங்கிரஸ் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தில்லி முதல்வர் யார் என்பது குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும். மற்ற மாநிலங்களில் கடைபிடிக்கப்பட்டதைப்போன்று, தலைமை அறிவிக்கும் முதல்வர் யாராக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு செயல்படுவோம் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | 2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்