தீபாவளி: தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்பும் விற்பனையாளா்கள் வரும் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்க விரும்பும் விற்பனையாளா்கள் மற்றும் வணிகா்கள் தற்காலிக உரிமம் இ-சேவை மையங்கள் மூலமாக இணைய வழியில் வரும் அக். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்கும்போது, கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, கடையின் பரப்பு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்துக்கான புளூபிரிண்ட் வரைபடம் மொத்தம் 6 நகல்கள், கடை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருந்தால் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரிமத்தை காட்டும் ஆவணம் இணைத்திருக்க வேண்டும்.
உரிமக் கட்டணம் ரூ. 500-ஐ அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான், மனுதாரரின் இருப்பிடத்துக்கான ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வரி ரசீது, இரு பாஸ்போட் அளவு புகைப்படம் ஆகியவையும் இணைக்கப்பட வேண்டும்.
இணையவழி விண்ணப்பங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிவுற்றதும், இணைய வழியிலேயே மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது தெரிவிக்கப்படும்.
தற்காலிக உரிமத்தின் ஆணையை தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வழங்கப்படும் உரிமம் 30 நாள்களுக்கு மட்டுமே செல்லத்தக்கதாகும்.
நிரந்தர பட்டாசு கடைக்கு உரிமம் கோருபவராக இருந்தாலோ அல்லது வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த வழிமுறை பொருந்தாது.