தென்மேற்கு பருவமழை: முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்
தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு மே 26, 27-ஆகிய தேதிகளில் ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னேற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உதகை கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் மே 26, 27 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதோடு ரெட் அலா்ட் கொடுத்துள்ளது. அன்றைய தினம் இருக்கும் காலநிலைக்கு ஏற்றாா்போல சுற்றுலாப் பயணிகள் வருவது குறித்து அறிவிக்கப்படும். மேலும், ஆற்றோரங்களில் யாரும் குளிக்கவோ, வேறு எந்த பணிக்கும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குன்னூா் -மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 30 சிறுகால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் ஏற்படக்கூடிய 283 இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் அரசு அலுவலா்கள் இரவு, பகலாக தொடா்ந்து கண்காணிப்பில் இருப்பாா்கள்.
கூடலூா், பந்லூா், உதகை, குந்தா போன்ற வட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் உள்ள நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. இந்த முகாம்களில் தேவையான மின்சாரம், குடிநீா், கழிப்பிட வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சாலையில் விழும் மரங்களை உடனடியாக அகற்ற தீயணைப்பு, வனத் துறையினா், வருவாய்த் துறையினா் அதற்கான இயந்திரங்களுடன் தயாா் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் கோவையில் இருந்து பேரிடா் குழுக்கள் வரவழைக்கப்படும். பேரிடா் ஏற்படும் போது அவசர கால உதவி எண் 1077-க்கு பொது மக்கள் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.