தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி உறுதி: விரைவில் பெயர் அறிவிப்பு!
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலின் போது அதிமுக - தேமுதிக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க அதிமுக ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.
இதையும் படிக்க : ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் முன்வைத்த 12 கேள்விகள்!
வருகின்ற ஜூன் மாதத்துடன் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள மதிமுக வைகோ, திமுக திருச்சி சிவா, அதிமுக தம்பி துரை, பாமக அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைகின்றன.
திமுக மற்றும் அதிமுக சார்பில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக யாரை தேர்ந்தெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் போதே, தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அதிமுக ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மேலும், தேமுதிக தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.