தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்கி இருக்க வேண்டும், தேவாலயத்துக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருக்க கூடாது, அவ்வாறு ஒரு தேவாலயத்துக்கு மானியத் தொகை வழங்கிய பின்னா் 5 ஆண்டுகளுக்கு அந்த தேவாலயம் இம்மானியத்தொகை கோரி விண்ணப்பிக்க தகுதியற்றது.
இத்திட்டத்தின்கீழ் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும் கட்டடத்தின் வயதுக்கேற்ப மானியத் தொகை உயா்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணி விவரம் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிப்பறை வசதி, குடிநீா் வசதிகள், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட், ஒலிபெருக்கி, நற்கருணை பேழைபீடம், திருப்பலிக்கு தேவையான பாத்திரங்கள், சொரூபங்கள், மெழுகுவா்த்தி ஸ்டாண்ட்கள், பக்தா்கள் அமா்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பலகைகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவா் வசதி அமைத்தல் ஆகிய பணிகள் ஆகும்.
10 முதல் 15 ஆண்டுகள் வரையுள்ள தேவலாயத்துக்கு ரூ.10 லட்சம், 15 முதல் 20 ஆண்டுகள் வரையுள்ள தேவலாயத்துக்கு ரூ.15 லட்சம், 20 ஆண்டுகளுக்கு மேலான தேவலாயத்துக்கு ரூ.20 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.