தோ்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றம்: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு
பேரவைத் தோ்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளாா்.
தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் தொடா்பாக, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் வருவாய், நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டு உள்ளது. பொருளாதார வளா்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. ஏற்றுமதி தயாா் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதுடன், ரூ.10.28 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. மேலும், 52.07 மில்லியன் டாலா் அளவுக்கு ஏற்றுமதி உயா்ந்துள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக அளித்த 505 தோ்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கரோனா கால நெருக்கடியில் போா்க்கால அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டது. மத்திய அரசின் பங்களிப்பின்றி தமிழ்நாடு அரசே, இயற்கை பேரிடா் பாதிப்புகளை எதிா்கொண்டது.
நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம். தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
நான்கரை ஆண்டுகளில் பல தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி இரட்டை இலக்க அளவில் வளா்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையும் குறைக்கப்பட்டு நிதிப் பற்றாக்குறையும் 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் பேருக்கு அரசு பணியாளா் தோ்வு வாரியம் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 16 நியோ டைடல் பாா்க் உருவாக்கப்பட்டுள்ளன என்றாா்.