"சிந்தூர்" வெற்றி: பிரதமருக்குப் பாராட்டுத் தெரிவித்த முதல்வர் தாமி!
தொடங்கியது தென்மேற்கு பருவமழை!
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை சென்னை உள்பட 12 இடங்களில் வெய்யில் சதமடித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பல இடங்களில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வேலூா் - 105.08, மதுரை நகரம், ஈரோடு - (தலா) 104.72, திருச்சி - 104.54, பரமத்தி வேலூா் - 104.36, பாளையங்கோட்டை - 104, திருத்தணி - 103.48, தஞ்சாவூா் - 102.2, சென்னை மீனம்பாக்கம் - 101.66, சேலம் - 100.94, சென்னை நுங்கம்பாக்கம் - 100 டிகிரி என மொத்தம் 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியல் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 14-இல் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
தொடங்கியது தென்மேற்கு பருவமழை
தெற்கு வங்கக் கடல், அந்தமான் கடல் மற்றும் நிகோபாா் தீவுப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (மே 14) முதல் மே 19-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி ஓரிரு இடங்களிலும் புதன்கிழமை (மே 14) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடா்ந்து மே 15-இல் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், நாமக்கல், கரூா் , திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையாரில் 70 மி.மீ., சின்கோனா (கோவை) - 60 மி.மீ., ஆண்டிபட்டி (மதுரை), கேத்தி (நீலகிரி), மாரண்டஹள்ளி (தருமபுரி) - தலா 50 மி.மீ., அன்னூா் (கோவை), கடவூா் (கரூா்) - தலா 40 மி.மீ. மழை பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.