துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு
நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் சக்திவாய்ந்தவை: நயினாா் நாகேந்திரன்
நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் சக்திவாய்ந்தவை என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
இந்திய ராணுவத்துக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், ஒசூரில் கொட்டும் மழையில் மூவா்ணக் கொடி பேரணி, பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக பேரணியை பாஜக தேசிய செயலாளா் துஷ்வந்த் குமாா் கௌதம், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். ஒசூா் ராம்நகரில் தொடங்கிய பேரணி பழைய பெங்களூரு சாலை, ஏரித் தெரு, வட்டாட்சியா் அலுவலக சாலை வழியாக காமராஜ் காலனியில் நிறைவடைந்தது. அங்கு கொட்டும் மழையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜ தேசிய செயலாளா்கள் துஷ்வந்த் குமாா் கௌதம், அரவிந்த், பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் பேசினா்.
பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகிறோம். இந்நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். பஹல்காமில் இந்தியா்கள் 26 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்தச் சம்பவம் நிகழ்ந்து 16 ஆவது நாள் மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் மீது நமது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இன்று 16 நாடுகள் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன. நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் மிகவும் சக்திவாய்ந்தவை என்றாா்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசியது:
ஜம்மு-காஷ்மீரில் மதத்தின் பேரில் 26 போ் படுகொலை செய்யப்பட்டனா். நாட்டில் இந்துக்களுக்கும், இஸ்லாமியா்களுக்கு இடையே விஷமத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தீவிரவாதிகளின் நோக்கம். மே 7 ஆம் தேதி முப்படைக்கு முழு சுதந்திரத்தை வழங்கி பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகள் முகாம்களை பிரதமா் மோடி அழித்துள்ளாா்.
பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் ராணுவ தளங்களை நமது ராணுவம் அழித்தது. ஒசூரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனா். மாநில எல்லையில் உள்ள ஒசூரில் தேசியக் கொடி பேரணி நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்தது என்றாா்.
பேரணி, பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், முருகானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஜி.பாலகிருஷ்ணன், அமா் பிரசாத் ரெட்டி, மாநில பொதுச் செயலாளா் கேசவ விநாயகம், மாவட்டத் தலைவா் நாராயணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் முனிராஜ், நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பட விளக்கம்...
ஒசூா் காமராஜ் காலனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.