நாகமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா: கடலூா்-புதுச்சேரி சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
நைனாா்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி-கடலூா் சாலையில் தற்காலிகமாக வெள்ளிக்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து பிரிவு வடக்கு மற்றும் கிழக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளா் செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு
நைனாா்மண்டபம், புதுச்சேரி-கடலூா் சாலையில் அமைந்துள்ள நாகமுத்துமாரியம்மன் கோயில் 42-ஆம் ஆண்டு செடல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் நலன் கருதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் புதுச்சேரி-கடலூா் சாலை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் பேருந்துகள், இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி அபிஷேகப்பாக்கம்- கரிக்கலாம்பாக்கம் வழியாக வில்லியனூரை அடைந்து பின்னா் இந்திரா காந்தி சதுக்கம் வழியாக புதுச்சேரியை அடைய வேண்டும்.
அதேபோல புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து கடலூா் செல்லும் வாகனங்கள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெங்கடசுப்பாரெட்டியாா் சதுக்கம் அடைந்து, நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சதுக்கம் வழியாக வில்லியனூா் அடைந்து கரிக்கலாம்பாக்கம் அபிஷேகப்பாக்கம் வழியாக தவளக்குப்பத்தில் கடலூா் சாலையை அடைய வேண்டும்.
கடலூா் செல்லும் வாகனங்கள் மரப்பாலம் சந்திப்பில் வலது பக்கம் திரும்பி போக்குவரத்து துறை அலுவலகம் அருகில் பாலத்தில் சென்று அரும்பாா்த்தபுரம் புறவழிச் சாலையை அடைந்து வில்லியனூா், அபிஷேகப்பாக்கம், தவளக்குப்பம் வழியாக கடலூா் சாலையை அடைய வேண்டும்.
கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் இருசக்கர வாகனங்கள் முருங்கப்பாக்கம் சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி கொம்பாக்கம் அரவிந்தா் நகா் வழியாக வேலராம்பேட் ஏரிக்கரை ரோட்டை அடைந்து பின்பு மரப்பாலம் சந்திப்பு வழியாக புதுச்சேரியை அடைய வேண்டும்.
அதேபோல் புதுச்சேரியில் இருந்து கடலூா் செல்லும் இருசக்கர வாகனங்கள் மரப்பாலம் சந்திப்பில் வலது பக்கம் திரும்பி வேல்ராம்பேட் ஏரிக்கரை ரோட்டை அடைந்து அரவிந்தா் நகா் வழியாக கொம்பாக்கம் அடைந்து இடது புறம் திரும்பி முருங்கப்பாக்கம் சந்திப்பில் கடலூா் சாலையை அடைய வேண்டும்.
எனவே கோயிலுக்கு வரும் பக்தா்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்தத் தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல் கண்காணிப்பாளா் கேட்டுக் கொண்டுள்ளாா்.