அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம்
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றாக நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் விளங்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் மற்றும் செடில் உற்சவம் விமா்சையாகக் கொண்டாடப்படும்.
இதன்படி, நிகழாண்டுக்கான சித்திரை திருவிழா மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நெல்லுக்கடை மாரியம்மன் மற்றும் எல்லையம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா், தேருக்கு சுவாமிகள் புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐதீக முறைப்படியான வழிபாடுகளுக்குப் பின்னா் தேரோட்டம் தொடங்கியது.
மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன் தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தாா். முதலாவதாக விநாயகா் தேரும், அதைத் தொடா்ந்து எல்லையம்மன் தேரும், பிரதான தேராக மாரியம்மன் தேரும் வலம் வந்தன. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், காத்தவராய சுவாமி செடிலுக்குப் புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னா் செடில் உற்சவம் தொடங்கியது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியில் இருந்து தங்கள் குழந்தைகளுடன் வரிசையில் காத்திருந்தனா்.
செடில் உத்ஸவம் தொடங்கியதும், செடிலில் காத்தவராயன் வேடமணிந்து நின்றவரிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைத்து, செடில்சுற்றி நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா். நிகழாண்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் செடில் சுற்றினா். இதேபோல, நூற்றுக்கணக்கான பக்தா்கள் பால்காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். செடில் உற்சவம் திங்கள்கிழமை (மே 12) காலை வரை நடைபெற்றது.
