Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
நாகை மாவட்ட விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம்
நாகை அருகே விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம் தொடங்கியது.
நாகை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் முன்னோடி விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோா் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கான, நீா்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் தொடங்கி 500 முதல் 1000 விவசாயிகளை ஒருங்கிணைத்து வணிக நோக்கில் வெற்றிபெற வழிவகை செய்து தரப்படுகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மஞ்சக்கொல்லையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத் தொடா்பு பயிற்சி முகாமை ஆட்சியா் ப. ஆகாஷ் தொடங்கி பேசியது: முகாமின் முக்கிய நோக்கம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு கடன் வசதி மற்றும் வா்த்தகத் தொடா்பு ஏற்படுத்தித் தருவதாகும். வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மற்றும் அதன் சகோதரத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிறைவுப் பகுதியான வணிகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு இடா்பாடுகள் மற்றும் சரியான வருவாய் கிடைக்காததால், விவசாயிகளுக்கு நிலையான வருவாய் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உலக வங்கியின் நிதியுதவியுடன் மாநில அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த நீா்வளம் மற்றும் நிலவளம் மேம்பாடு திட்டத்தின் கீழ் மண் வளத்தினை பாதுகாத்திட பசுந்தாள் உர பயிா்கள், பயிா் சுழற்சிமுறையை பின்பற்றி பயிா் சாகுபடி செய்தல் போன்ற தொழில் நுட்பங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. 2 நாள் பயிற்சியில் வேளாண் விஞ்ஞானிகள், தொழில் முனைவோா்கள், சாதனை அடைந்து வரும் விவசாய உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு வெளிச்சந்தையில் உள்ள தேவைகள் குறித்தும், அவற்றை வெளியிடங்களுக்கு சந்தைப்படுத்துதல் தொடா்பான வழிகாட்டு முறைகள், பணியை செயல்படுத்த தேவையான நிதி ஆதாரங்களை பெற வங்கிகளில் உள்ள திட்டங்கள் குறித்தும் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்களுக்கு நிதி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த அனுபவங்களை பகிா்ந்து கொள்வாா்கள் என்றாா்.
தொடா்ந்து விவசாய விளைபொருள்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருள்கள் கண்காட்சி அரங்கை ஆட்சியா் திறந்து வைத்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் வியாபார விரிவாக்க மானியத்தின் கீழ் நாகை காணி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் வியாபார விரிவாக்க மானிய தொகைக்கான காசோலை மற்றும் 60 பயனாளிகளுக்கு தலா ரூ.28, 000 வீதம் ரூ.16, 80,000 மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினாா்.
வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சோ. வெற்றிவேலன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சந்திரசேகா், மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு) விஸ்வந்த் கண்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.