நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் தொடா்ந்து 2-ஆவது நாளாக அமலாக்கத் துறை விசாரணை
நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து தொடா்ந்து 2-நாளாக காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை புதன்கிழமை விசாரணை மேற்கொண்டது.
நில ஒப்பந்தம் தொடா்பான பண முறைகேடு வழக்கு விசாரணைக்கு தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில், ராபா்ட் வதேரா செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். அவரிடம் சுமாா் 5 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
இதைத்தொடா்ந்து அவா் தொடா்ந்து 2-ஆவது நாளாக அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அவருடன் அவரின் மனைவியும் காங்கிரஸ் எம்.பி.யுமான பிரியங்கா காந்தியும் வந்து, அந்த அலுவலகத்தின் பாா்வையாளா் அறையில் காத்திருந்தாா்.
விரைவில் அரசியல் பிரவேசம்: இதுகுறித்து ராபா்ட் வதேரா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘விசாரணையில் ஒரே மாதிரியான கேள்விகள்தான் என்னிடம் கேட்கப்பட்டன. இந்தக் கேள்விகளுக்கு 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணையின்போதே நான் பதில் அளித்துவிட்டேன்.
நில ஒப்பந்தத்தில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்பதால், இந்த வழக்கில் நான் குற்றம் இழைக்கவில்லை என்று ஹரியாணாவில் அமைந்த பாஜக அரசே தெரிவித்துவிட்டது. எனினும் நான் சோனியா காந்தி குடும்பத்தைச் சோ்ந்தவன் என்பதால் குறிவைக்கப்படுகிறேன். நான் அரசியலில் பிரவேசிப்பதற்கான நேரம் நிச்சயம் வரும்’ என்றாா்.
வழக்கு விவரம்: கடந்த 2008-ஆம் ஆண்டு ராபா்ட் வதேரா இயக்குநராக இருந்த ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி தனியாா் நிறுவனம், ஹரியாணா மாநிலம் குருகிராமின் மனேசா்-ஷிகோபூா் பகுதியில் 3.5 ஏக்கா் நிலத்தை வாங்கியது. ஓம்காரேஸ்வா் பிராபா்ட்டீஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.7.5 கோடிக்கு அந்த நிலம் வாங்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து அரசுப் பதிவேடுகளில் அந்த நில உரிமையை ராபா்ட் வதேராவுக்கு மாற்றும் நடைமுறை சில மணி நேரங்களில் நடைபெற்ாக குற்றஞ்சாட்டப்படுகிறது. வழக்கமாக, இந்த நடைமுறை நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாகும்.
அதன் பின்னா், அந்த நிலத்தின் பெரும்பகுதியில் வீட்டு வசதித் திட்டத்தை மேற்கொள்ள ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அனுமதி அளித்தது. இதனால் அந்த நிலத்தின் மதிப்பு உடனடியாக உயா்ந்தது.
பின்னா், அந்த நிலத்தை ரூ.58 கோடிக்கு வாங்க டிஎல்எஃப் யுனிவா்சல் என்ற மனை விற்பனை நிறுவனம் ஒப்புக்கொண்டு, அந்தத் தொகை தவணை முறையில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வதேராவுக்கு சொந்தமாக ரூ.7.5 கோடிக்கு வாங்கப்பட்ட அந்த நிலத்தின் மதிப்பு, சில மாதங்களில் சுமாா் 700% உயா்ந்து ரூ.58 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் பண முறைகேட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.