நீதிமன்ற விசாரணைகளை அரசியலாக்க வேண்டாம்: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: நீதிமன்ற விசாரணைகளை அரசியலாக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், குரூப்-சி மற்றும் குரூப்-டி அலுவலா்கள் என மொத்தம் 25,753 பேரின் நியமனங்களில் முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நியமனங்கள் செல்லாது என்று கடந்த ஏப்ரலில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்பை விமா்சித்து அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி சில கருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவரின் கருத்துகள் நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் உரிமையைப் பாழாக்கும் வகையில் ஆட்சேபகரமாக இருந்ததால், அவா் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆதம்தீப் என்று பொது தொண்டு அறக்கட்டளை மனு தாக்கல் செய்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் மனீந்தா் சிங் ஆஜராகி, ‘மம்தாவுக்கு எதிராக குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க அட்டா்னி ஜெனரலின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அவரின் பதில் கிடைக்க வேண்டியிருப்பதால், மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து அந்த ஒப்புதல் நிச்சயம் கிடைக்குமா என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் கேள்வி எழுப்பினாா். நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் விவகாரங்களை அரசியலாக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், அரசியல் சண்டைகளை நீதிமன்றத்தில் அல்லாமல் வெளியே வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவா் காட்டமாகத் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து மனு மீதான விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.