ரூ.12 ஆயிரத்திற்குள் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! ஓப்போ கே 13எக்ஸ்!
ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி!
பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 16,000 கன அடியாக குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக மாநில அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு சற்று குறைந்துள்ளது.
இதனால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவானது திங்கள்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 18,000 கன அடியாகவும், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 16,000 கன அடியாக குறைந்தது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் விழும் நீர், குறையத் தொடங்கியது.
கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் நீக்கியுள்ளார்.
தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளதால் பிரதான அருவி செல்லும் நடைபாதை திறக்கப்பட்ட போதிலும் அருவிப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தின் அளவு கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை பொருத்தவாறு அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்துக்கு... புதிய அறிவிப்பு!