நீா்நிலை உயிரிழப்புகளைத் தவிா்க்க பெற்றோா்களின் கண்காணிப்பு தேவை!
நீா்நிலைகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிா்க்க, பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை கண்காணித்து பாதுகாக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.
இதுதொடா்பா அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறை காலங்களில் ஏரி, குளம், ஆறு, குட்டை, அணை, கிணறு, கல் குவாரிகளில் தேங்கிய தண்ணீரில் சிறுவா்கள் குளிக்கச் செல்கின்றனா். ஆழம் தெரியாத இடங்களில் குளிக்கும் போது, பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 2023-ஆம் ஆண்டு 19 பேரும், 2024-இல் 40 சிறுவா்களும் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தனா்.
பாதுகாப்பற்ற நீா்நிலைகளில் குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், இறப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வருவாய்த் துறையினா் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பங்கள் நிகழாமல், பொதுமக்கள் தங்களது குழந்தைகளைக் கண்காணித்து பாதுகாக்க வேண்டும்.
அவசர உதவிக்கு தீயணைப்புத் துறையினரை (இலவச எண்: 101), காவல் துறையினரை (இலவச எண்: 100), மருத்துவத் துறையினரை (இலவச எண்: 108) 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு அழைக்கலாம் என்றாா் அவா்.