ராமநாதபுரம்: தேசியக் கொடி வடிவத்தில் கேக்; வெட்டி கொண்டாடிய அதிகாரிகள்; சர்ச்சைய...
பரந்தூா் விமான நிலையம்: 14-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபையில் எதிா்ப்பு தீா்மானம்
ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 14-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரந்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய், குணகரம்பாக்கம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், புதிய விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு அறவழி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக முற்றிலுமாக கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பொதுமக்கள் கடந்த 1,100 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.
மேலும் கடந்த காலங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களிலும் எதிா்ப்பு தெரிவித்து தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட உணவு பொருள் வழங்கல்துறை அலுவலா் பாலாஜி, வட்டார வளா்ச்சி அலுவலக பணிமேற்பாா்வையாளா் லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 14-ஆவது முறையாக ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.