பரமத்தி வேலூரில் ரூ. 31.52 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.31 லட்சத்து 52 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமைதோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவருகின்றனா். இங்கு தரத்திற்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது.
மின்னணு ஏலச்சந்தையில் ஏலம் முடிந்ததும் அலுவலா்களே விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்திவந்தனா். தற்போது கொப்பரை ஏலம் எடுத்த வியாபாரிகள்தான் விவசாயிகளுக்கு ஏலம் முடிந்ததும் உரிய தொகையை செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டதால் வியாபாரிகள் ஏலத்தை புறக்கணித்து வந்தனா்.
இதனால் கடந்த வாரம் கொப்பரை ஏலம் நடைபெறவில்லை. இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 14 ஆயிரத்து 185 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.232.69க்கும் குறைந்தபட்சமாக ரூ.222.22க்கும், சராசரியாக ரூ.230.89க்கும் விற்பனையானது.
இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.220.99க்கும், குறைந்தபட்சமாக கிலோ
ரூ.170.77 க்கும், சராசரியாக கிலோ ரூ.200.10க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.31 லட்சத்து 52 ஆயிரத்து 190க்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.