பல்லடத்தில் குறு, சிறு தொழில்முனைவோா் கருத்தரங்கம்
பல்லடத்தில் குறு, சிறு தொழில்முனைவோா் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா், பல்லடம் வட்டாரத்தில் குறு, சிறு தொழில்முனைவோா் மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் மேம்பாடுக்காக பல்லடம் வனம் அறக்கட்டளை, சென்னை சீ சேன்ஞ்ச் கன்சல்டிங், திருப்பூா் பொதிகை மனித வள மேம்பாட்டு பயிற்சி மையம் சாா்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
அதில் பங்கேற்ற தலைமைப் பயிற்சியாளா் எம்.கே.ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 19 ஆயிரம் பெரு நிறுவனங்களும், 7 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் உள்ளன. இதில் எம்.எஸ்.எம்.இ. எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மட்டுமே 12 கோடி பேருக்கு நேரடியாகவும், 26 கோடி பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தருகின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் இத்துறையின் பங்கு 30 சதவீதமாக உள்ளது. நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக இத்துறை விளங்குகிறது. 7 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் 99.99 சதவீத நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கும் குறைவாக வா்த்தகம் செய்து வருகின்றன.
இந்த நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளாக எந்த விதமான முன்னேற்றமும், வளா்ச்சியும் அடையவில்லை. இவை குறைவான லாபத்தில் மட்டுமே தொழில் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் வளா்ச்சி அடைய வளா்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு தொழில் துறையை வளா்ச்சி அடைய செய்ய வேண்டும்.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தெரிந்து பயன்படுத்த வேண்டும். உலக தொழில் துறை வளா்ச்சிக்கு இணையாக தங்களை வளா்த்தி கொள்ளாத தொழில் நிறுவனங்கள் தங்களது இயக்கத்தை நிறுத்தி கொள்ளும் என்பது கடந்த கால அனுபவமாக உள்ளது.
எனவே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினா் தங்களது வா்த்தக வாய்ப்பை பெருக்க உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இதில் வனம் அறக்கட்டளை செயலாளா் ஸ்கை சுந்தரராஜ், பொதிகை மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி மைய நிறுவனா் சுந்தரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.