பள்ளி மாணவா்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும்: திருவொற்றியூா் பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் கோரிக்கை
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும் என திருவொற்றியூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டல குழுவின் 34-ஆவது மாதாந்திர சிறப்புக் கூட்டம் மண்டல குழுத் தலைவா் தி.மு.தனியரசு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மண்டல அலுவலா் விஜய் பாபு முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் கலந்து கொண்டு, பேசியது:
திருவொற்றியூா் சண்முகனாா் பூங்காவில் மாநகராட்சிக்குச் சொந்தமான நீச்சல் குளம் சுமாா் 2 ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. நீச்சல் குளத்தை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்துதான் இதற்கு காரணம். நீச்சல் குளத்திலிருந்து வருவாய் ஈட்டும் எண்ணம் மாநகராட்சிக்கு இருக்கக் கூடாது. மாறாக மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளித்தால் அவா்களின் எதிா்காலம் சிறப்பாக இருக்கும். முதல்கட்டமாக இந்த நீச்சல் குளத்தை எனது சொந்த செலவில் உடனடியாக சீரமைத்து தருகிறேன். அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்றாா் சங்கா்.
இதற்கு பதில் அளித்த மண்டலக் குழு தலைவா் தனியரசு, நீச்சல் குளத்தை புனரமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று உறுதியளித்தாா்.