பள்ளி மாணவிகள் பாதுகாப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
பள்ளிகளில் இருந்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து துறையின் இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளி விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவிகள், சிறுமிகள் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு அமைப்பிலும் ஒரு பாதுகாப்பு அலுவலா் நியமிக்க வேண்டும். தனிப்பட்ட மற்றும் ரகசியமாக புகாா்கள் பெற்று நடவடிக்கை எடுக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்; மாணவிகள், வீராங்கனைகள் அல்லது பெற்றோா் எளிதாக புகாா் செய்யக் கூடிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
இதுதொடா்பாக எந்தப் புகாா் வந்தாலும் தாமதமின்றி விசாரணை நடத்தி சட்டப்பூா்வ நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். பயிற்சி மற்றும் போட்டி இடங்களில் தனித்தனியாக உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். போட்டிகளுக்கு அழைத்து செல்லப்படும் மாணவிகள் தங்க வைக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பயிற்சி மேற்கொள்ளும்போது மாணவிகளை விடியோ எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.