துணைவேந்தர்கள் நியமனம்: "4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" - உச்ச நீதிமன்றம்
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.
அதில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களின் நியமிக்கும் அதிகாரத்தை மாநில முதல்வருக்கு வழங்கும் மசோதாவும் ஒன்று.
ஆளுநர் தேவையற்ற கால தாமதம் செய்கிறார் எனக்கூறி தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த 10 மசோதாக்களுக்கும் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இதனையடுத்து அந்த மசோதாக்களை சட்டமாக அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
அதேசமயம், துணைவேந்தர்களின் நியமிக்க மாநில முதல்வருக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி பா.ஜ.க-வை சேர்ந்த வழக்கறிஞரான வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது கடந்த மே 21-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் விரிவான விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏற்கனவே இந்த குறிப்பிட்ட மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி ட்ரான்ஸ்பர் மனு தாக்கல் செய்திருப்பதாகவும், எனவே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது எனவும் வாதங்களை முன் வைத்திருந்தனர்.
ஆனால் அந்த வாதங்களை நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட மேல்முறையீட்டு செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் விடுமுறை கால சிறப்பு அமர்வு
நீதிபதிகள் பி.வி.நரசிம்மா, ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதில், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோர், "உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் இருக்கும் மனு குறித்த விவரங்களை எடுத்து சொல்லியும்கூட அதைக் கவனத்தில் கொள்ளாமல் சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு அவசர அவசரமாக இந்த வழக்கை விசாரித்து இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருக்கின்றது.
எனவே இந்த உத்தரவுக்குத் தடை விதிப்பதோடு, ஜூலை இரண்டாம் உயர் நீதிமன்ற விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும்." எனக் கோரிக்கை வைத்தனர்.

அப்போது யு.ஜி.சி சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதை ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தார்
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவில், வெங்கடாசலபதி, மத்திய அரசு, ஆளுநர் மாளிகை, யு.ஜி.சி நான்கு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பது குறித்து அடுத்த விசாரணையின்போது முடிவு செய்யலாம் என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.