ஜேமி ஸ்மித் 157* ரன்கள், ஹாரி ப்ரூக் 140* ரன்கள்; வலுவாக மீண்டு வரும் இங்கிலாந்து அணி!
ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி ப்ரூக்கின் அசத்தலான சதங்களால், தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
ஜேமி ஸ்மித், ஹாரி ப்ரூக் சதம் விளாசல்
முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பென் டக்கெட், ஆலி போப் இருவரும் 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஸாக் கிராலி 19 ரன்களிலும், ஜோ ரூட் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் பென் ஸ்டோக்ஸும் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில், ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியவில்லை.
தேநீர் இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 169 பந்துகளில் 157 ரன்களுடனும் (19 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்), ஹாரி ப்ரூக் 209 பந்துகளில் 140 ரன்களுடனும் (15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) களத்தில் உள்ளனர்.
தேநீர் இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 232 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Jamie Smith 157*, Harry Brook 140*; England team coming back strong!
இதையும் படிக்க: 15 ஆண்டுகளில் முதல் முறை... சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை!