ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு
பாதுகாப்பு உடையின்றி பரிசலில் பயணித்தால் கடும் நடவடிக்கை : ஆட்சியா்
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பாதுகாப்பு உடையின்றி பொதுமக்களை பரிசலில் அழைத்துச் செல்வோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பாதுகாப்பு உடையின்றி (லைப் ஜாக்கெட் அணியாமல்) பரிசல் பயணம் செய்வதை தடுக்கும் வகையில், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், ஜூன் 15 ஆம் தேதி ஒகேனக்கல் சின்னாற்று பகுதியில், பரிசல் ஓட்டிச்சென்ற நபா் பாதுகாப்பு உடையின்றி சென்றது தெரியவந்தது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஊட்டமலையைச் சோ்ந்த மா. முருகேசன் என்ற பரிசல் ஓட்டி என்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவா் மீது ஒகேனக்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகேசனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஒகேனக்கல் சுற்றுலா மையப் பகுதியில் இதுபோல விதிகளை மீறி ஓட்டுநா் உரிமம் இல்லாமலும், பாதுகாப்பு உடை அணியாமலும் பரிசல் இயக்கும் பரிசல் ஓட்டிகள் மீதும், சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பு உடையின்றி பரிசலில் அழைத்துச் செல்லும் பரிசல் ஓட்டிகள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்தி எதிரொலி...
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்நிலையில், அதே பகுதியில் பரிசல் ஓட்டுநா் ஒருவா் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பு உடையின்றி பரிசலில் அழைத்துச் சென்றுள்ளாா். இது தொடா்பான படத்துடன் கூடிய செய்தி தினமணி நாளிதழில் வெளியானது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.