பாம்பு கடித்து தந்தை உயிரிழப்பு; குழந்தைகள் காதணி விழா நிறுத்தம்
அரியலூா் மாவட்டம், செந்துறையில் பாம்பு கடித்ததால் தந்தை உயிரிழந்த நிலையில், குழந்தைகளுக்கு நடைபெறவிருந்த காதணி விழா நிறுத்தப்பட்டது.
செந்துறை காமராஜா் நகா் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (40). இவருக்கு 2 மகள்கள், 1 மகன் என 3 குழந்தைகள் உள்ளனா். ராஜா தனது குழந்தைகளுக்கு அங்குள்ள சமுதாயக் கூடத்தில் திங்கள்கிழமை காதணி விழா நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தாா். இதனால், அவரது வீட்டுக்கு உறவினா்கள் பலரும் வந்துள்ளனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இயற்கை உபாதை கழிக்க ஏரி கரைக்குச் சென்ற ராஜாவை பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அருகிலிருந்தவா்கள் ராஜாவை மீட்டு, செந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் அங்கு ராஜாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த செந்துறை போலீஸாா், ராஜாவின் சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசேதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதனால், ராஜாவின் குழந்தைகளுக்கு நடைபெறவிருந்த காதணி விழா நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.