ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அதிர்ச்சி அளிக்கிறது: இபிஎஸ்
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் தங்கள் கட்சியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும் விழா, மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு விழா கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் பங்கேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் அதே பள்ளியைச் சோ்ந்த 3 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தக் குற்றச் சம்பவத்தில் ஆசிரியா்கள் ஈடுபட்டது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவா்களுக்கு ஒழுக்கத்தையும் நோ்மையையும் கற்றுத்தரும் ஆசிரியா் பணியில் உள்ளவா்கள் இதுபோல செயல்படுவதை மன்னிக்க முடியாது.
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவா்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை அளிக்க வேண்டும். பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை போக்ஸோ சட்டத்தில் மட்டுமின்றி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்திலும் கைது செய்ய வேண்டும். பாலியல் குற்றங்கள் தொடா்பான வழக்குகளை விரைந்து விசாரித்து 60 நாள்களில் நீதிமன்றம் தீா்ப்பளிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் ஹிந்துக்கள், இஸ்லாமியா்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனா். அங்கு ஹிந்துக்கள் என்ற பெயரில் மதப் பிரிவினையை சிலா் தூண்டுகின்றனா். அவா்களின் எண்ணம் தமிழகத்தில் எடுபடாது என்றாா்.