பாலி சென்ற ஏர் இந்தியா விமானம் தில்லிக்கே திரும்பியது!
தில்லியில் இருந்து இந்தோனேஷியாவின் பாலிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் தில்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
தில்லி விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை பாலிக்கு ஏர் இந்தியாவின் ஏஐ2145 விமானம் புறப்பட்டுச் சென்றது.
இந்த நிலையில், பாலி விமான நிலையத்தை ஏர் இந்தியா விமானம் நெருங்கியபோது, அப்பகுதியில் எரிமலை வெடித்துச் சிதறியதால், மீண்டும் தில்லிக்கே திரும்பிச் செல்ல விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி தில்லிக்கே திரும்பிவந்ததாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளுக்கு தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், பயணத்தை ரத்து செய்ய விரும்பும் பயணிகளுக்கு முழு பணத்தையும் திருப்பி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலி அருகேவுள்ள சுற்றுலா தீவான புளோரஸில் உள்ள 1,584 மீட்டர் உயரமுள்ள எரிமலையான மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி செவ்வாயன்று வெடித்தது.
இதன்காரணமாக 10 கி.மீ. உயரத்துக்கு புகைமூட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஏர் இந்தியா மட்டுமின்றி, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜூன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களும் பாலி இயக்கப்படும் விமான சேவையை ரத்து செய்துள்ளன.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான பிறகு, இதுவரை 83 சேவைகளை அந்நிறுவனம் ரத்து செய்துள்ளதாகவும், அதில் 66 போயிங் 787 ரக விமானம் என்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.