பிரதமர் மோடிக்காகவே வாக்களிக்கின்றனர்; சாதிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்
பிகாரில் தேர்தல்களில் சாதி அடிப்படையில் வாக்களிக்கப்படுவதாக எழுந்த கருத்துக்கு ஜன் சுராஜ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
பிகாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், பிகாரில் தேர்தல்களில் சாதி குறித்த அடிப்படையில் வாக்களிக்கப்படுகிறதா என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து, பிரசாந்த் கிஷோர் கூறுகையில், பிகாரில் மக்களவைத் தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக நிறைய வெற்றிகளைப் பெற்று வருகிறது. பிகாரில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில்தான் வாக்களிக்கின்றனர். பிகாரில் ஒவ்வொரு சாதி அடிப்படையிலும்தான் அரசியலில் வாக்களிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள்.
ஆனால், பிகாரில் மோடியின் சாதியைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று சொல்லுங்கள்? பிகாரில் பிரதமர் மோடியின் சாதியைச் சேர்ந்த யாரும் இல்லை.
இதன் பொருள், மக்கள் தங்கள் சாதியைத் தவிர, பிரதமர் மோடியின் பெயரிலும் வாக்களிக்கின்றனர். இந்து மதம் என்ற பெயரில் ராமர் கோவில், வளர்ச்சிக்காக அல்லது தேசியவாதத்துக்காக அவர்கள் (பாஜகவினர்) எதைச் செய்தாலும், அது வேறு பிரச்னை. ஆனால், அவர்கள் சாதி என்ற பெயரில் அவற்றை செய்யவில்லை.
பிகாரில் எம்-ஒய் (Muslim - Yadav) என்ற வகைப்பாடு இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். லாலு பிரசாத் யாதவ், ஒய் (Yadav) சாதி. ஆனால், அவருக்கு 18 சதவிகித எம் (Muslim) வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் ஏன் லாலுவுக்கு வாக்களிக்கின்றனர்?
அவர்கள் ஒரே சாதி அல்லவே. அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க முடியாது என்பதால், லாலுவுக்கு வாக்களிக்கின்றனர். ஆகையால், சாதி என்பது ஒரு காரணி மட்டுமே; அது மட்டுமே காரணம் அல்ல என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:ரூ. 857 கோடி சம்பளத்தில் செய்யறிவு வேலை! மெட்டா அழைப்பு!