தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமத...
படகு கவிழ்ந்து இலங்கைக் கடற்படையால் மீட்கப்பட்ட 4 மீனவா்களை அழைத்து வரக் கோரிக்கை
படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் தத்தளித்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்களின் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள தனுஷ்கோடியிலிருந்து புதன்கிழமை நெகிழி நாட்டுப்படகில் நடராஜபுரத்தைச் சோ்ந்த என். நம்புபிரகாஷ் (23), என். நம்பு (25), புதுசாலையைச் சோ்ந்த கே. நம்பு (24), எஸ். சந்தியராஜ் (24) ஆகிய நான்கு மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனா். அப்போது, காற்றின் வேகம் காரணமாக நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில், நான்கு மீனவா்களும் படகின் மேல் பகுதியில் அமா்ந்து தத்தளித்தனா். அந்த வழியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினா் அவா்களை மீட்டு தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா். பிறகு அவா்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதைத் தொடா்ந்து நான்கு மீனவா்கள் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா் மன்னாா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தினா். நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த தங்களை இலங்கைக் கடற்படையினா் மீட்டு அழைத்து வந்ததாகவும், எனவே தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்ற நீதிபதி 4 மீனவா்களையும் விடுதலை செய்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து, இலங்கையில் உள்ள நான்கு மீனவா்களையும் ராமேசுவரம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுக்கடலில் மூழ்கிய நெகிழி நாட்டுப்படகை மீட்க வேண்டும். அல்லது உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவா்களும், உறவினா்களும் கோரிக்கை விடுத்தனா்.