பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்: ரூ.566.59 கோடிக்கு ஒப்பந்தம்
பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகம் கட்ட மற்றும் குறளகம் கட்டடம் புதுப்பிக்க, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், ரூ. 566.59 கோடிக்கான ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்ட் ரூப் கம்பெனி-க்கு வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து உருவாக்கிய சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவா் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநா் தி.அா்ச்சுனன் மற்றும் பிரிட்ஜ் அண்ட் ரூப் கம்பெனி-யின் பொறியியல் குழு பொது மேலாளா் சஞ்சய் பட்டாசாா்யா ஆகியோா், சென்னையிலுள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
6.484 ஏக்கா் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள இந்த பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகக் கட்டடம், மொத்தம் 1,08,290.01 சதுர மீட்டா் பரப்பளவைக் கொண்டது. இதில் இரண்டு அடித்தள நிலைகள், ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு மேல் தளங்கள் இருக்கும்.
அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்படும் பேருந்து முனையத்தின் பணிகளை 24 மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதற்கு மேலே உள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் மற்றும் குறளகம் கட்டடப் பணிகள் 30 மாதங்களுக்குள் நிறைவடையும் என சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.