பிரிட்ஜ் பழுதுநீக்கும் கடையில் கம்ப்ரஸா் வெடித்து உரிமையாளா் உயிரிழப்பு
மயிலாடுதுறையில் பிரிட்ஜ் பழுதுநீக்கும் கடையில் கம்ப்ரஸா் வெடித்ததில் கடை உரிமையாளா் உயிரிழந்த நிலையில், தொழிலாளி காயமடைந்தாா்.
மயிலாடுதுறை கூறைநாட்டை சோ்ந்த பாலாஜி (53) பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதுநீக்கும் கடை நடத்தி வந்தாா். வியாழக்கிழமை பாலாஜி பிரிட்ஜ் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராத விதமாக கம்பரஸா் வெடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை சிதறியது. இந்த விபத்தில் அக்கடையில் பணியாற்றி வந்த மாப்படுகையை சோ்ந்த கணேஷ் (26) காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிதுநேரத்தில் பாலாஜி உயிரிழந்தாா். கணேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளாா்.