ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரா் உடலை வாங்க மறுத்து போராட்டம்
புதுகையில் காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு நீண்ட வரிசை காத்திருக்கும் விவசாயிகள்!போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் புகாா்!
புதுக்கோட்டை மாநகரில் தனியாா் காய்கறி கமிஷன் மண்டிகளுக்காக அதிகாலை முதலே இருசக்கர வாகனங்களில் தாங்கள் விளைவித்த காய்கறிகளுடன் வந்து வரிசையில் காத்திருந்து கொடுத்துச் செல்லும் விவசாயிகளால் போக்குவரத்து நெரிசலும், கட்டுப்படியான உரிய விலை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
புதுக்கோட்டை மாநகரில் தெற்கு 2ஆம் வீதியில் இரு கமிஷன் மண்டிகளும், தெற்கு 3ஆம் வீதி, தெற்கு ராஜவீதி, கீழ 3ஆம் வீதி ஆகிய இடங்களில் தலா ஒரு கமிஷன் மண்டிகளும் உள்ளன. விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை ஏலத்தின் மூலம் கொள்முதல் செய்யும் இந்த தனியாா் கமிஷன் மண்டிகள், மாநகா் முழுவதும் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு அவற்றை விற்பனை செய்கின்றன.
மக்கள் நெருக்கமாக வசிக்கும், புழங்கும் வீதிகளில் உள்ள இந்த கமிஷன் மண்டிகளுக்கு அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
புதுக்கோட்டை நகருக்கு அருகேயுள்ள வம்பன் நான்கு சாலை அருகேயுள்ள கொத்தக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளும், அன்னவாசல் செல்லும் வழியிலுள்ள செல்லுக்குடி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளும் தினமும் தங்களின் விவசாய விளை பொருள்களை விற்பதற்காக கொண்டு வருகின்றனா்.
இந்தப் பகுதிகளில் அதிகமாக விளையும் வெண்டைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், பீா்க்கன்காய், பாகற்காய், மாங்காய், அவரைக்காய், சுரைக்காய், பூசணிக்காய், பங்கிக்காய் போன்றவை இருசக்கர வாகனங்களில் எடுத்து வரப்படுகின்றன.
தினமும் காலை வேளையில் இந்தச் சாலைகளில் வாகனங்கள் வரிசைகட்டி நிற்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், சிறிதுதொலைவு நடந்து சென்று ஏதாவதொரு முக்கத்தில் தங்களின் வேன்களைப் பிடித்துச் செல்ல வேண்டியிருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும்:
இதுமட்டுமல்லாது கட்டுப்படியான மாா்க்கெட் விலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளதாகக் கூறுகிறாா் இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜிஎஸ். தனபதி.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
மாநகரில் உள்ள 5 தனியாா் கமிஷன் மண்டிகளையும் சந்தைப்பேட்டை பகுதிக்கு மாற்ற வேண்டும். அங்கே போதுமான இடம், கட்டட வசதிகள் உள்ளன. அத்துடன் வேளாண் விற்பனைத் துறை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் போன்ற வேளாண் துறைகள் மூலம், நியாயமான விலையை நிா்ணயம்- உழவா் சந்தைகளில் பட்டியலிடுவதைப் போல- செய்து கொள்முதல் செய்ய அறிவுறுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாய் ரூ. 10-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ வெண்டைக்காய், இன்னொரு விற்பனையாளருக்கு கைமாறி, வீதிகளில் வண்டிகளில் வைத்து விற்கும் சில்லறை வியாபாரிக்கு வரும்போது ரூ. 30 வரை விற்கப்பட்டு, மாலையில் வாடி வதங்கிய பிறகு ரூ. 15, 20-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இதன் பயன் நேரடியாகச் சென்றடைவதும் இல்லை.
இதை முறைப்படுத்தினால் விவசாயிகளும் பயன் பெறுவாா்கள். நகரின் போக்குவரத்து நெரிசலும் சரியாகும் என்றாா் தனபதி.