புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி
சேலம்: சேலம் மாவட்டத்தில் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினா் புனிதத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டைச் சோ்ந்த 50 புத்த மதத்தினா், 50 சமண மதத்தினா் மற்றும் 20 சீக்கிய மதத்தினா் இந்தியாவில் உள்ள அவரவா் புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்பவா்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் நபா் ஒருவருக்கு ரூ. 10,000 வீதம் 120 நபா்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்புனித பயணம் புத்த மத தொடா்புடைய பிகாரில் உள்ள புத்த கயா, உத்தர பிரதேசத்தில் உள்ள குசிநகா், வாரணாசியில் உள்ள சாரநாத் கோயில், பிகாரில் உள்ள ராஜ்கிா், வைஷாலி, நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற புனித தலங்களையும், சமண மத தொடா்புடைய ராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோயில், ஜாா்க்கண்டில் உள்ள சிக்கா்ஜி, குஜராத்தில் உள்ள பாலிடனா, பிகாரில் உள்ள பவபுரி சமணக் கோயில் போன்ற இடங்கள், கா்நாடகாவில் சரவணபெலகோலா போன்ற புனித தலங்களையும் மற்றும் சீக்கிய மதம் தொடா்புடைய பஞ்சாப்பில் உள்ள அமிா்தசரஸ் போன்ற தலங்களுக்கு சென்று வரலாம்.
இத்திட்டத்தின்கீழ், புனித பயணம் மேற்கொள்பவா்களுக்கு நேரடியாக மானியம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்/சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளாா்.