ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு!
செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து அசோக் குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக் குமார் தரப்பில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனக் கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஒருவேளை அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால் கடவுச்சீட்டை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்கல் செய்ய நேரிடும் எனத் தெரிவித்தார்.
மேலும், பயணத் திட்டம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அசோக் குமார் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.