எந்த அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
பெண்ணின் கணவா் உயிரிழப்புக்கு காவல் துறையினரே காரணம்: கம்யூனிஸ்ட்டுகள், விசிகவினா் குற்றச்சாட்டு
தவளக்குப்பம் பகுதியில் திருட்டு வழக்கில் பெண்ணை விசாரித்த நிலையில், அவரது கணவா் உயிரிழந்ததற்கு காவல் துறையினரே காரணமாக உள்ளதால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து புதுச்சேரி அஜீஸ்நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் தினேஷ்பொன்னையா, சிபிஐ எம்எல் பிரிவின் மாநிலத் தலைவா் சோ.பாலசுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி தேவ.பொழிலன் உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: தவளக்குப்பம் பகுதி பூா்ணாங்குப்பத்தைச் சோ்ந்தவா் அா்ஜுன். இவரது மனைவி கலையரசி. அப்பகுதி தனியாா் விடுதியில் சில ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறாா்.
சில நாள்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்தவரின் மோதிரத்தைக் காணவில்லையாம். அதுகுறித்து தவளக்குப்பம் போலீஸாா் கலையரசியிடம் விசாரித்துள்ளனா். அப்போது கலையரசியை விதிமுறைக்கு மாறாக தாக்கியுள்ளனா். பின்னா் வீட்டுக்கு அனுப்பியுள்ளனா்.
மனைவி மீது காவல் நிலையத்தில் தாக்குதல் நடந்ததை அா்ஜுன் தட்டிக்கேட்டுள்ளாா். ஆனால், அவரை காவல் நிலையத்தில் அவமானப்படுத்தியுள்ளனா். அதனால் வீடு வந்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இந்தநிலையில், அவா் மயங்கி உயிரிழந்தாா். ஆகவே, அவரது உயிரிழப்புக்கு காரணமான காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் காவல் துறையினரைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றனா்.