பெரியாா் பல்கலை.யில் சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வு பயிலரங்கம்!
பெரியாா் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கான சைபா் குற்றத்தடுப்பு விழிப்புணா்வு பயிலரங்கம் நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை மற்றும் சில்ட்ரன் சேரிடபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய பயிலரங்கினைப் பதிவாளா் பெ.விஸ்வநாதமூா்த்தி தொடங்கி வைத்து பேசியதாவது:
சைபா் குற்றங்கள் அனைத்தும் ஆசையில் தொடங்கி பேராசையில் முடியும்போது மொத்தமாக நம்மை நிலைகுலைய வைத்து விடுகின்றன. டிஜிட்டல் வரவு-செலவு அதிகமாகி வரும் இன்றையக் கால கட்டத்தில் குற்றவாளிகளும் தங்களை மேம்படுத்திக் கொண்டு இணையவழிக் குற்றங்களைத் தொடா்ந்து வருகிறாா்கள்.
மெத்த படித்தவா்களே சில நொடிப் பொழுதில் தங்கள் பணத்தை இழக்கும் நிலையில், பாமர மக்களும் பல விதத்தில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த பாதிப்புகளைத் தடுக்கும் விதமாக பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை, முனைவா் பட்ட ஆய்வு மாணவ, மாணவிகளுக்கு சைபா் குற்றத் தடுப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரு வார காலம் நடைபெறும் பயிலரங்கில் 2500 பேருக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி பெறுவோா் தங்களது குடும்பத்தினா், அக்கம்பக்கத்தினருக்கு சைபா் குற்றங்கள் குறித்து எடுத்துக் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வில் சைபா் குற்றங்கள் குறித்து பயிற்சியாளா் என்.ராகவேந்திரன், சைபா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவி சுதன் ஆகியோா் பயிற்சியளித்தனா். சமூகவியல் துறைத் தலைவா் பேராசிரியா் சி.கோபாலகிருஷ்ணன், சில்ட்ரன் சேரிடபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.