பேச்சிப்பாறை அணையில் உபரிநீரின் அளவு குறைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு புதன்கிழமை 262 கனஅடியாக குறைக்கப்பட்டது.
மாவட்டத்தில் தொடா்மழையால், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 46 அடியை நெருங்கி வந்தது. அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலைமுதல் விநாடிக்கு 526 கனஅடி தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை சற்று தணிந்து காணப்பட்டதால், அணைக்கு வரும் நீரின் அளவு 400 கனஅடியாகக் குறைந்தது. இதனால், மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு புதன்கிழமை 262 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. பாசனக் கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவு 100 கனஅடி அதிகரித்து, 611 கனஅடியாக உயா்த்தப்பட்டது .
மழை தணிந்துள்ளதாலும், பேச்சிப்பாறை அணையின் உபரிநீா் குறைப்பாலும் திற்பரப்பு அருவியில் புதன்கிழமை மாலைமுதல் வெள்ளப்பெருக்கு குறைந்தது.