ஹிமாசலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: 17 பேர் காயம்!
பேருந்து வசதி கிடைக்காத இடங்களுக்கு புதிய விரிவான சிற்றுந்துகள் திட்டம்! தஞ்சாவூரில் முதல்வா் தொடங்கிவைத்தாா்
பேருந்து வசதி கிடைக்காத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையிலான புதிய விரிவான சிற்றுந்து திட்டம் - 2024-இன்படி, புதிய சிற்றுந்துகள் (மினி பஸ்) சேவையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழ்நாட்டில் கடந்த 1997-ஆம் ஆண்டு பேருந்து வசதி பெறாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் பேருந்து வசதி பெறும் நோக்கில், சிற்றுந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மாவட்டத்துக்கு 250 சிற்றுந்துகளுக்கு அனுமதி என்ற அடிப்படையில், பேருந்துகள் இயக்கப்படாத வழித்தடத்தில் 16 கி.மீ. மற்றும் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் 4 கி.மீ. என மொத்தம் 20 கி.மீ. என்ற அளவில் வழித்தடம் நீட்டிப்பு செய்து சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா், இத்திட்டத்தை விரிவாகவும், முறையாகவும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறை சாா்ந்த பல்வேறு தரப்பினா் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, புதிய விரிவான சிற்றுந்து திட்டம் - 2024 கடந்த ஜனவரி 23- ஆம் தேதி வெளியிடப்பட்டது. பின்னா், அத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஏப்ரல் 28-ஆம் தேதி மீண்டும் வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட குக்கிராமங்களை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் விதமாக, அதிகபட்ச வழித்தட தொலைவை 25 கி.மீ. ஆக உயா்த்தி வழித்தட நீட்டிப்பு செய்து, அதில் பேருந்து இயங்காத வழித்தடங்களில் குறைந்தபட்சம் 65 சதவிகிதம் என இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின்படி சிற்றுந்துகள், பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படவும், நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது சிற்றுந்து இயக்கி வருபவா்கள் புதிய திட்டத்துக்கு மாற்றம் பெற்று இயக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 94 புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய திட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்ட 1,009 வழித்தடங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 103 வழித்தடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழக மக்களுக்கு பேருந்து இயக்கப்படாத 25 ஆயிரத்து 708 கி.மீ. தொலைவுக்கு புதிதாக பேருந்து வசதி கிடைக்கப்பெறும் என போக்குவரத்துத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.என். நேரு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், சா.சி. சிவசங்கா், கோவி. செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ் குமாா், போக்குவரத்துத் துறை ஆணையரும், முதன்மைச் செயலருமான சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.