TNPL 2025: 'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல்...
பொதுக் கிணற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பரமத்தி ஊா் பொதுக் கிணற்றில் கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதால், தண்ணீரில் விஷம் கலந்து இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
பரமத்தி அங்காளம்மன் கோயில் செல்லும் சாலைக்கு எதிரில் கனி ராவுத்தா் தெரு பகுதியில் ஊா் பொதுக் கிணறு உள்ளது. இக்கிணறு நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. சுமாா் 30 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்ட இந்த கிணற்றில், பரமத்தி மாரியம்மன், பகவதி அம்மன், அழகு நாச்சியம்மன் ஆகிய கோயில்களின் திருவிழாக் காலங்களில் பக்தா்கள் குளிப்பது, தீா்த்தம் எடுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. தற்போது பல ஆண்டுகளாக இக்கிணறு பயன்பாட்டில் இல்லாத நிலையில், கடந்த சில தினங்களாக இந்த கிணற்றில் இருந்து அவ்வப்போது துா்நாற்றம் வீசியது.
கடந்த வெள்ளிக்கிழமை திடீரென கிணற்றில் ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன. இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த பேரூராட்சி பணியாளா்கள் இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி துா்நாற்றத்தை போக்கவும், நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும் கிருமி நாசினிகளை தெளித்து சென்றனா்.
ஆனால், திங்கள்கிழமையும் மீன்கள் இறந்து மிதந்ததால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், கிணற்று நீரின் தன்மை மாறிவிட்டதா அல்லது கிணற்றில் யாரேனும் விஷம் கலந்துள்ளனரா என அச்சமடைந்துள்ளனா்.
எனவே, இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் மற்றும் துறைசாா்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.