புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்!
பொன்னாரம்பட்டியில் புதிய சிறை அமைக்க திட்டம்?
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டியில் புதிய சிறைச்சாலை அமைக்கும் திட்டத்திற்கான கோப்புகளை தயாா் செய்யும் பணியில் வருவாய், சிறைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் இயங்கிவருகிறது. இந்த நீதிமன்றத்திற்கு உள்பட்ட வழக்குகளில் தொடா்புடைய விசாரணை கைதிகள் சேலம் அல்லது ஆத்தூா் சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனா். இந்த நிலையில் வாழப்பாடி பகுதியில் புதிய சிறைச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக வாழப்பாடி பொன்னாரம்பட்டி ஊராட்சி பரவக்காடு பகுதியில் 1000 ஏக்கா் பரப்பளவில் காணப்படும் அரசு புறம்போக்கு நிலத்தில் 50 ஏக்கா் பரப்பளவு நிலத்தை வருவாய்த் துறையிடம் இருந்து பெற்று புதிய சிறைச்சாலை அமைக்க சிறைத் துறையினா் நடவடிக்கை எடுத்துவருகின்றனா்.
இதனிடையே வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி தலைமையிலான வருவாய்த் துறையினா் இதற்கான கோப்புகளை தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். வருவாய்த் துறை நிலத்தை அளவீடு செய்து ஒப்படைத்ததும், சிறைச்சாலை அமைப்பற்கான திட்ட முன்வரைவு மற்றும் திட்ட மதிப்பீடு தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு சேலம் மாவட்ட சிறைத் துறை திட்டமிட்டுள்ளது.
மேலும், பொன்னாரம்பட்டி பரவக்காடு அரசு புறம்போக்கு நிலத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொழில் முன்னேற்றக் கழகமும் அண்மையில் ஆய்வு மேற்கொண்டுள்ளதால் இப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
சிறைச்சாலை, சிப்காட் அமைய உள்ள இடத்தில் வனத் துறை காடு வளா்ப்புத் திட்டத்தின் கீழ் மரங்களை நட்டு வளா்த்துள்ளனா். நிலம் வருவாய்த் துறையிடம் இருந்தாலும் பெரும் பகுதி வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் வனத் துறையிடமும் தடையின்மை சான்று பெற வேண்டும்.