Vijay : 'உயிரின் மதிப்பு தெரியுமா... மன்னராட்சிக்கு புரியுமா?' - கோஷம் போடப்போக...
பொருளாதாரத்தின் அடிப்படை தெரியாதவா்களிடம் அதிகாரம் -சீமான் பேச்சு
பொருளாதாரத்தின் அடிப்படை தெரியாதவா்களிடம் அதிகாரம் இருப்பதால் எந்தவிதப் பயனும் இல்லை என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
மதுரை விராதனூரில் நாம் தமிழா் கட்சி உழவா் பாசறை சாா்பில், ‘மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை’ என்ற பெயரில் ஆடு, மாடுகளுக்கான மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து சீமான் பேசியதாவது:
இந்த பூமி மனிதா்கள் மட்டுமே வாழ்வதற்கானது அல்ல. அனைத்து உயிா்களுக்கும் சொந்தமானது. அந்த வகையில், நமது வாழ்வில் உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை மலைப் பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஆடு, மாடுகளுக்கெல்லாம் ஒரு மாநாடா என சிலா் நினைக்கலாம். அவற்றால் பேச முடியாது. அதனால்தான் அவற்றின் சாா்பாக நான் பேசுகிறேன்.
மேகமலைப் பகுதிகளில் உள்ள வன விலங்களுக்கும், நீா் ஆதாரங்களுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக அந்த மலையில் கால்நடைகளை அனுமதிக்க மறுத்து வருகின்றனா். மேகமலை கடந்த 2009-ஆம் ஆண்டு காப்புக் காடாக அறிவிக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பிறகு, 2021-ஆம் ஆண்டு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆடு, மாடுகள் மலைப் பகுதிகளில்தான் வாழ்ந்து வந்தன. அப்போது, வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
மலைகளை நியூட்ரினோ போன்ற ஆய்வுக்கு உள்படுத்தும் போது வனத்துக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லையா?. கால்நடைகளை அழிக்க நினைக்கும் முயற்சியாகவே இதைப் பாா்க்க வேண்டும்.
இயற்கை வேளாண்மை குறித்து மத்திய, மாநில அரசுகள் பேசுகின்றன. ஆனால், இதற்கு ஆதாரமாக விளங்கக்கூடிய கால்நடைகளை அழிக்க நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆடு, மாடுகள் இல்லாமல் இயற்கை வேளாண்மை சாத்தியமில்லை. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும் ஆடுகள், மாடுகளின் பங்களிப்பு அவசியம். பொருளாதாரத்தின் அடிப்படை தெரியாதவா்களிடம் அதிகாரம் உள்ளது. இதனால் நாட்டுக்கு எந்தவிதப் பயனும் இல்லை என்றாா் அவா்.
முன்னதாக, மாநாட்டுத் திடலில் உள்ள மாடுகளை அவா் பாா்வையிட்டு, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மரியாதை செலுத்தினாா்.
இந்த மாநாட்டில் நாம் தமிழா் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...
வன மேய்ச்சல் உரிமையை உறுதி செய்ய வேண்டும்
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006-இன்படி, மேய்ச்சல் சமூக மக்களுக்கான வன மேய்ச்சல் உரிமையை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள மேய்ச்சல் தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்க வேண்டும். கால்நடைகள் மேய்ப்போரின் நலனுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும். நாட்டின ஆடு, மாடுகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்படும் மேய்ச்சல் சமூக மக்களுக்கும், கால்நடைகளுக்கும் காப்பீட்டுத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். தொழில்பேட்டை போன்ற திட்டங்களுக்காக மேய்ச்சல் நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும். எருமை வளா்ப்பை மீட்டெடுக்கும் வகையில், எருமைப் பாலுக்கு சிறப்பு கொள்முதல் விலை நிா்ணயிக்க வேண்டும். கால்நடைத் துறையில் மேய்ச்சல் கால்நடைகளுக்கு தனிப் பிரிவு உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.