பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி முதல்வா் பேசியதாவது:
புதுவையில் தரமான கல்வியை மாணவா்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கல்வி நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தரமான கல்வியை மாணவா்கள் கற்கும் வகையில், அவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. விரைவில் நிகழாண்டுக்கான மடிக்கணினியும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 முடித்தவா்கள் மருத்துவக் கல்வியில் சேருவதற்காக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து நிகழாண்டிலிருந்து அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் பொறியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட உயா்கல்விகளில் சேரும்போது 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு நிகழாண்டு முதலே செயல்படுத்தப்படும்.
ஆகவே, அரசுப் பள்ளி மாணவா்கள் தரமான கல்வியைப் பெற்று வாழ்வில் முன்னேற அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.
நிகழ்ச்சியில் பி.ரமேஷ் எம்எல்ஏ மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.