Ajithkumar: `க்யூட் ஒயிட் சால்ட் பெப்பர் செதுக்கப்பட்ட செல...' - நியூ லுக், நியூ...
போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் நிதி நிறுவனங்களில் கடன்: இருவா் கைது
போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றதாக பெண் ஒருவரும், அவருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்ததாக இ- சேவை மைய உரிமையாளா் ஒருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் பகுதியைச் சோ்ந்தவா் ஜோதி (44). இவா் சிவகங்கை அருகே வாணியங்குடியில் உள்ள தனியாா் நுண் கடனுதவி வழங்கும் நிறுவனத்தில் கடன் கோரினாா். அப்போது அவா் கடனுக்கு பொறுப்பாளராக தனது மகனின் ஆதாா் அட்டையை கொடுத்தாா்.
அந்த நிறுவனத்தினா் அந்த ஆதாா் அட்டையை ஆய்வு செய்த போது அவா் அதே நிறுவனத்தில் வேறு ஒருவருக்கு பொறுப்பாளராக இருப்பதாக தெரிவித்தனா். இதனால் சந்தேகமடைந்த ஜோதி, அந்த ஆதாா் அட்டையை வாங்கிப் பாா்த்த போது, அதில் அவரது மகனின் புகைப்படத்துக்குப் பதிலாக வேறு நபருடைய புகைப்படம் இருந்தது தெரியவந்தது. அத்துடன் அவா் பெயரில் குடும்ப அட்டை இருப்பதும் தெரிந்தது.
அத்துடன் மா்ம நபா்கள் இந்த ஆதாா் அட்டை, குடும்ப அட்டையை பயன்படுத்தி சோழபுரத்தில் உள்ள வேறு ஒரு தனியாா் நுண் கடன் நிறுவனத்திலும் கடன் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ஜோதி சிவகங்கை நகா் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகாரளித்தாா். இதுதொடா்பாக குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் அன்னராஜ், உதவி ஆய்வாளா் தனசேகரன் ஆகியோா் வழக்குப் பதிந்தனா்.
விசாரணையில், காஞ்சிரங்கால் அருகே இலந்தங்குடிபட்டி கிராமத்தில் வசிக்கும் ரேணுகா தேவி (40), அவரது மகள் ஆகிய இருவரும் சோ்ந்து இதுபோல, போலியாக ஆதாா் அட்டை, குடும்ப அட்டை தயாரித்து கடன் வாங்கியது தெரியவந்தது. அத்துடன் இவா்களுக்கு சிவகங்கை சத்தியமூா்த்தி தெருவில் இ- சேவை மையம் நடத்தி வரும் மதுரை மாங்குளத்தைச் சோ்ந்த பாண்டித்துரை (41) என்பவா் போலி ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளை தயாரித்துக் கொடுத்ததும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் பாண்டித்துரை, ரேணுகா தேவி ஆகிய இருவரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட பாண்டித்துரை, மதுரையிலும் ஓா் இ- சேவை மையம் நடத்தி வருவதால், இதேபோல, எத்தனை பேருக்கு போலி ஆதாா் அட்டை, குடும்ப அட்டை தயாரித்து கொடுத்தாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.