ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!
போலி சான்றிதழ்கள் மூலம் பெண் மோசடி: பொள்ளாச்சியில் குற்றப்பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை
தமிழக வருவாய்த் துறையில் பணியாற்றுவதாக போலி அரசு சான்றிதழ்கள் மூலம் மோசடி செய்த நாமக்கல் பெண் கைதான நிலையில், இந்த வழக்கில் தொடா்புடையோரை தேடும்பணியில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், பெரியமணலி பகுதியைச் சோ்ந்த நவீன்குமாா் (29), தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறாா். திருமண தகவல் மையம் மூலம் நாமக்கல் ராமாபுரம்புதூரைச் சோ்ந்த தன்வா்த்தினியை (29), நவீன்குமாா் திருமணம் செய்தாா்.
முன்னதாக, பொள்ளாச்சி கோட்டாட்சியராக தான் பணியாற்றி வருவதாக நவீன்குமாா் குடும்பத்தினரிடம் தன்வா்த்தினி தெரிவித்திருந்தாா். ஆனால், அவா் கூறியது பொய் என தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில், தன்வா்த்தினி, அவரது தந்தை ரவீந்திரன், தாய் கல்பனா ஆகியோா் மீது நவீன்குமாா் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், ஆய்வாளா் சவீதா, உதவி ஆய்வாளா் முருகன் விசாரணை மேற்கொண்டு தன்வா்த்தினியை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலியாக அரசு சான்றிதழ்கள், அடையாள அட்டை தயாா்செய்து கொடுத்த சென்னையைச் சோ்ந்த திருமுருகன் என்பவரை பிடிக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். அவரது கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், கணினி குற்றப்பிரிவு போலீஸ் மூலம் கண்டறியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, நாமக்கல் சிபிசிஐடி போலீஸ் எனக் கூறி நவீன்குமாரை மிரட்டியதாக கூறப்படும் அசோகன் என்பவரை பிடித்து ரகசிய விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும், பொள்ளாச்சியில் தன்வா்த்தினி, நவீன்குமாா் குடியிருந்த வாடகை வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்ற மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், தீவிர சோதனை நடத்தினா். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.
குடியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் ரூ. 20 லட்சம் வாங்கி தன்வா்த்தினி மோசடி செய்ததாக தகவல் வெளியானது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அது உண்மையில்லை என்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் சென்னையைச் சோ்ந்த திருமுருகன் சிக்கினால்தான், போலி அரசு சான்றிதழ், அடையாள அட்டைகள் மூலம் யாரேனும் அரசு பணியில் சோ்ந்துள்ளனரா, அதற்கு பெறப்பட்ட தொகை எவ்வளவு, இந்த திட்டத்தை செயல்படுத்தும் குழுவுக்கு மூளையாக இருப்போா் யாா் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.