72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
நாமக்கல் மாவட்டத்தில் 83.41 மி.மீ. கூடுதல் மழைப் பொழிவு
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 270.36 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 83.41 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். அதன்பிறகு, சிப்காட் தொழிற்பேட்டை விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் எடுத்துரைத்தனா்.
மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல்கூட்டம் என்பதால், விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வுகாண நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். தற்போது வரை 270.36 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முடிய இயல்பு மழையளவைக் காட்டிலும் 83.41 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது.
2025-26-ஆம் ஆண்டில் மே மாதம் வரை நெல் 67 ஹெக்டோ், சிறுதானியங்கள் 3,867 ஹெக்டோ், பயறுவகைகள் 884 ஹெக்டோ், எண்ணெய் வித்துக்கள் 3,224 ஹெக்டோ், பருத்தி 445 ஹெக்டோ் மற்றும் கரும்பு 562 ஹெக்டோ் என மொத்தம் 9,049 ஹெக்டேரில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு காரீப் பருவத்துக்கு பாசிப்பயறு பயிா் செய்த விவசாயிகள் ஜூலை 15-க்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து 130 குறைதீா் மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, வேளாண் இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி, கோட்டாட்சியா்கள் வே.சாந்தி (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.