முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில...
கொல்லிமலையில் ரூ. 23 கோடியில் நலத்திட்ட உதவிகள்
கொல்லிமலை ஒன்றியத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ. 23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வடிவேல் தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று, கலைஞா் வீடு வழங்கும் திட்டம், முதல்வரின் வீடுகள் மறுகட்டமைப்பு திட்டம், விவசாயிகளுக்கு புதிய கிணறு அமைத்தல் உள்ளிட்ட 80 பயனாளிகளுக்கு ரூ. 23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். கொல்லிமலையை முதன்மை சுற்றுலாத் தலமாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா்.
தமிழ்நாடு பழங்குடியினா் நல வாரியத்தை புதிதாக உருவாக்கி, கொல்லிமலை தேவனூா்நாடு ஊராட்சியைச் சோ்ந்த கனிமொழி என்பவரை வாரியத் தலைவராக முதல்வா் நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பழங்குடியினா் நல வாரிய உறுப்பினா்கள் காளியப்பன், பாலசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஈஸ்வரன், பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.