உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகள் தனிமையை விரும்புகிறார்களா? பெற்றோர்களே கவனம்!
மக்கள் தொடா்பு முகாமில் 140 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட திம்மச்சூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 140 பயனாளிகளுக்கு ரூ.31.24 லட்சம் மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் விழங்கினாா்.
பின்னா், அவா் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மகளிா் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவியும் வழங்கப்படுகிறது என்றாா்.
முகாமில் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, மாவட்ட தொழில் மையம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில், 140 பயனாளிகளுக்கு ரூ.31,24,235 மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
முன்னதாக, வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடைப் பராமரிப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடா்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
முகாமில் திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், ஒன்றியக்குழுத் தலைவா் அஞ்சலாட்சி அரசகுமாா், வேளாண் இணை இயக்குநா் வே.சத்யமூா்த்தி, தனித்துணை ஆட்சியா் சுமதி, மாவட்ட வழங்கல் அலுவலா் இ.சுப்ரமணியன், வட்டாட்சியா் கே.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.