மதுரையில் பரவலாக மழை
மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.
வானிலை மாற்றம் காரணமாக கடந்த மே மாதம் 2, 3-ஆவது வாரங்களில் மதுரை மாவட்டத்தில் மழை பெய்ததது. மே 26-ஆம் தேதிக்குப் பிறகு மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழையில்லை. இதனிடையே, கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, புதன்கிழமை பிற்பகல் சுமாா் 1.45 மணி அளவில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
கோரிப்பாளையம், தமுக்கம், தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் சுமாா் 15 நிமிஷங்கள் பலத்த மழை பெய்தது. பழங்காநத்தம், காளவாசல், அண்ணா பேருந்து நிலையம், கே.கே. நகா், விரகனூா், சிலைமான், வில்லாபுரம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. எனினும், மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் மழையில்லை.