27 ஆண்டுகளாக கிடப்பில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்!
மதுரை மாநகராட்சி: வரி விதிப்பில் ரூ.200 கோடி முறைகேடு; மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மீது புகார்
மாநகராட்சிக்கு ரூ 200 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்படுத்தி வரி விதிப்பில் மோசடி செய்த புகாரில் மாநகராட்சி ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதன் பின்னணியில் மாநகராட்சியின் உயர் அதிகாரிகள், மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள், புரோக்கர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பரபரப்பை ஏற்படுத்தி வரும் இச்சம்பவம் குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். "மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வார்டுகளில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தனியார் கட்டடங்கள் உள்ளன. ஏரியாவுக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு கட்டடங்களுக்கும் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. வரியை குறைக்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகம் அல்லது நீதிமன்றத்தில் முறையிட்டு குறைக்க வேண்டும்.
ஆனால், இந்த விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் கடந்த சில ஆண்டுகளாக மண்டலம் 2, 3, 4, 5 ஆகியவற்றுக்கு உள்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரி குறைத்து நிர்ணயிக்கப்பட்டிருந்தது மாநகராட்சி ஆணையாளரின் விசாரணையில் கடந்த ஆண்டு தெரிய வந்தது.
அனத்து வரி விதிப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்றுவரும் நிலையில் வரிவிதிப்பை நிர்ணயிக்கும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது.
இதுகுறித்து கடந்த ஆண்டு ஆணையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் முறைகேடுகளை கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரித்த மத்திய குற்றப் பிரிவு போலீசார் முறைகேடுகள் நடைபெற்ற மண்டல அலுவலகங்களில் சமீப நாள்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி 3 ஆவது மண்டல தலைவரின் நேர்முக உதவியாளரான தனசேகரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உதவி ஆணையாளரின் உதவியாளர் கார்த்திகேயன், இடைத்தரர்களான உசேன், ராஜேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதைத் தொடர்ந்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் மண்டலத் தலைவர்கள், வரிவிதிப்பு குழுவினர், கவுன்சிலர்களின் வற்புறுத்தல் காரணமாகவே முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
அந்த அடிப்படையில் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சில மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்களை விசாரிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.